என் மஞ்சள் நிற நாயகி...

மஞ்சள் நாயகி காத்திருக்கிறாள் எனக்காக...
வெளியில் தன் பரந்த கூந்தலை உலர்த்தியபடி...

முன்பெல்லாம் அவளுக்கு முன்னெழுந்து அவளுக்காகக் காத்திருப்பேன்...
அவள் முகத்தில் விழித்துவிட்டுச் செல்வதே ஓர் ஆனந்தம் தான்!

இப்பொழுதெல்லாம்
அவளைத் தலைவிரிக் கோலத்துடன் தரிசிக்க முடிவதில்லை...

எனக்கு முன்னெழுந்து
குளித்து முடித்துத் தலை கோதியபடி இருக்கும்
அவளைச் சந்திக்கவே மனம் கொள்வதில்லை...

உச்சிப் பொழுதில் வியர்வைச் சொட்டச் சொட்ட 
கடுமையாய் அவள் உழைத்துக் கொண்டிருந்தாலும் 
முன்பெல்லாம் அவளுக்கும் எனக்கும்
தவிர்க்க முடியாதவொரு உறவு இருந்தது என்னவோ உண்மை தான்...
அதை என் பெற்றோரும் அறிந்திருந்தனர்...

இப்பொழுதோ, எனக்கும் அவளுக்குமான பரிச்சயங்களும்
ஸ்பரிச சுகங்களும் குறைந்து போய்விட்டன..
முற்றிலுமாக அற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது...
ஏனெனில் இன்னும் கூடக் காத்திருக்கிறாள்...
நான் வெளியில் வருவதற்காக...
தினம்தோறும் காலையில்...
நான் எந்த நாட்டில் இருந்தாலும்...